வீடுகளில் தனிமைப்படுத்தி தகரம் அடிக்க உத்தரவு எதுவும் இல்லை..!! சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி..!!
கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மாஸ்க் அணிய வேண்டும், வீடுகளில் தனிமைப்படுத்தி தகரம் அடிக்க உத்தரவு எதுவும் இல்லை எனவும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள என்.எஸ்.கே நகரில் கொரோனா தடுப்பு மருந்து சிகிச்சை முகாம் மற்றும் காய்ச்சல் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், "கொள்ளை நோய் நிபுணர்கள் கூறியுள்ள பரிசோதனையில் பாதிக்கப்பட்டோரின் விகிதமான 10% விழுக்காடை நாம் எப்போதோ எட்டி விட்டோம். கொரோனாவை முற்றிலும் ஒழிக்க கோவிட் சார்ந்த பழக்க வழக்கங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வு தேவை. முழுமையாக முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்றில் கடலூர், கோவை மற்றும் சென்னையை பொறுத்த வரை சற்று ஏற்றம் உள்ளது. சென்னையில் 500 கேம்புகள் மாநகராட்சியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டங்களை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கடைபிடிக்க வேண்டியது அனைவரின் கடமையும் கூட. கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மாஸ்க் அணிய வேண்டும், வீடுகளில் தனிமைப்படுத்தி தகரம் அடிக்க உத்தரவு எதுவும் இல்லை எனவும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் எம்ஜிஆர் பல்கலை கழக ஆராய்ச்சி மருந்து உட்பட 2 கொரோனா தடுப்பு மருந்துகளின் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுள்ளன", என்றார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில், "சென்னையில் 57 ஆயிரம் காய்ச்சல் முகாம்களில் 30 லட்சம் மக்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். காய்ச்சல் முகாம்கள் நடத்தியமைக்காக சுதந்திர தினத்தன்று அரசு விருதளித்து சிறப்பித்தது. அதே உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறோம். பரிசோதனையை 3 மடங்கு அதிகரித்துள்ளோம்.
இந்திய அளவில் 20% அளவு மக்களுக்கு அதாவது 5-ல் 1 நபருக்கு பரிசோதனை மேற்கொண்ட ஒரே மாநகராட்சியாக சென்னை உள்ளது. இதே வேகத்தில் இன்னும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் 7 முதல் 7.5% அளவிற்கு குறைக்க முயன்று வருகிறோம். இப்போதைக்கு கொரோனாவிற்கான தடுப்பு மருந்து முகக்கவசம் மட்டுமே. குறைந்தபட்சம் இன்னும் 3 மாதத்திற்காவது எந்த வயதினராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம். இதுவரை முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.2.25 கோடி அபராதம் வசூலித்துள்ளோம். மக்களை அபராதம் வசூலித்து பயமுறுத்துவது எங்கள் எண்ணமில்லை. இருந்தாலும் நோயை கட்டுப்படுத்த வரும் காலங்களில் காவல்துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல விதிமீறும் உணவகங்களை ஒரு மாதம் வரை கடையை மூட தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தெருவில் குறைந்தபட்சம் 5 பேராவது பாதிக்கப்பட்டால் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும்.
அதன்படிதான் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதி அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 2, 3 பாதிப்புகள் இருந்தாலோ, கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமென்றாலோ அதனை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கலாம் என்பதால் தற்போது சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் உயர காரணமாகும். நோய் பரவல் அதிகரிப்பில் 14 நாட்களுக்கு குறைவாக இருக்க கூடாது என்பதே ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல். ஆனால் நமக்கு 90 நாட்களுக்கு மேல் உள்ளது. சென்னை மாநகராட்சியில் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக 1.3% - 1.4% ஆக உள்ளது. இந்த விகிதமும் குறைந்துள்ளது", என்றார்.