இறைபணி செய்வதில் திமுகவினருக்கு இணையானவர்கள் யாருமில்லை... அமைச்சர் ரகுபதி திகுதிகு..!
இறைபணி செய்வதில் எங்களுக்கு இணையானவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்படுகிறது என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் உள்ள கோயில்களுக்கு உபயமாக வரப்பெற்ற பசுக்களை ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் கோயில்களின் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்து சமய அறநிலையத் துறையின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. கோயில் திருப்பணிகளுக்காக ரூ.100 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
தன் மூலம் இறைபணி செய்வதில் எங்களுக்கு இணையானவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்படுகிறது” என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். தமிழக இந்து சமயம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயில்களில் பயன்படாமல் உள்ள எதுவும் தெய்வத்துக்கு பயன்படும் எனில் எந்த விமர்சனத்தையும் சந்திக்க திமுக அரசு தயார்” என்று சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் ரகுபதியும் இறைபணி செய்வதில் திமுகவினருக்கு இணையானவர்கள் யாருமில்லை என்று தெரிவித்துள்ளார்.