சூரத், ராஜ்காட், ஆமதாபாத்தில் மட்டும் ஓட்டு மெஷிலை ஹேக் பண்ணிட்டாங்கோ... புலம்பித்தள்ளும் ஹர்திக் படேல்!
குஜராத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் தலைமுறை அரசியல்வாதியாக உருவெடுத்தார் ஹர்திக் படேல்.
ஊழலுக்கு எதிராக என்று சொல்லி, ஆளும் அரசை எதிர்த்து போராட்டம் செய்து, தாமே அரசு அமைத்த பின், தன் அரசையே எதிர்த்து போராட்டத்தில் களம் இறங்கிய அரவிந்த் கேஜ்ரிவாலைப் போல், படேல் சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் இறங்கினார் ஹர்திக்.
அவருடைய கோரிக்கை படேல் சமுதாய இளைய தலைமுறையினருக்கு பெரிதும் ஈர்ப்பாக அமைந்தது. அவ்வளவுதான்...! சமூக ஊடகங்களில் முழங்கினார்கள். இட ஒதுக்கீடு கோரினார்கள். ஹர்த்திக் திரட்டிய கூட்டத்துக்கு பிரமாண்டமான அளவில் சேர்ந்தார்கள்.
இதனால் குஜராத் அரசியல் அரங்கம் மட்டுமல்ல, இந்திய அரசியல் அரங்கே அதிர்ந்தது. இவ்வளவு கூட்டமா? இனி பாஜக.,வுக்கு ஆப்புதான் என்று முழங்கினார்கள்.
அதற்கு ஏற்ப குஜராத் மாநில சட்ட சபைத் தேர்தல் வந்தபோது, அரசியல் ரீதியாக பலமான போராட்டங்களை முன்னெடுத்தார் ஹர்திக் படேல். அவருக்கு கைகோர்க்க ராகுல் காந்தியும் உடன் வந்தார். போதாக்குறைக்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகுர் என ஓரிருவர் கரம் கோக்க, காங்கிரஸ் அணி, இளைய தலைமுறை நபர்களின் கூடாரம் ஆனது.
இதனால் ஆளும் பாஜக.,வுக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டது. மோடி என்ற ஒற்ற நபரின் பிரசாரத்துக்கு, இந்த இளைய தலைமுறையினர் தாக்குப் பிடிப்பார்களா என்றும், இவ்வளவு எதிர்ப்பையும் மீறி மோடி வெல்வாரா என்றும் குஜராத்தில் பந்தயம் கட்டினார்கள்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை... குஜராத்தில் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் இருந்த மோசமான அரசியல் சூழலும், மாநிலம் இருந்த நிலவரமும் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்போது மிக மோசமாக இருந்த மாநிலத்தை மோடி என்ற நபர் தாங்கிப் பிடித்து, மாநிலத்தை முன்னேறிய மாநிலம் ஆக்கினார். அந்த தியாக வரலாறுகள் எல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது, எனவே அவர்கள் ஹர்திக் படேல் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியவர்கள் பின் செல்ல வாய்ப்புகள் அதிகம் என்று பேசிக் கொண்டார்கள்.
ஆனால், இப்போதும் மோடியின் செல்வாக்கு பெரிதும் பாதிக்கப்படாமல், எதிர்ப்புகளை மீறி வென்று காட்டியுள்ளது பாஜக., இருப்பினும் வழக்கம் போல் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் ஹர்த்திக் படேல். அது, எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்கள் பற்றிதான்!
என்னதான் தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் கொடுத்தாலும், தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனம் மட்டும் ஹர்த்திக் படேலுக்கு இல்லை என்றுதான் தெரிகிறது. இப்போதும் அவர் சொல்லியிருப்பது... குஜராத் தேர்தலில், ஈவிஎம் எனப்படும் மெஷின்களில் தில்லுமுல்லு நடந்திருக்கிறது. சூரத், ராஜ்கோட், ஆமதாபாத் ஆகிய இடங்களில் ஓட்டு வித்தியாசம் குறைவாகவே பாஜகவினர் வென்றுள்ளனர். எனவே, இங்கெல்லாம் மெஷின்களில் தில்லு முல்லு நடத்தியிருக்கிறார்கள். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மோசடி செய்யப்படக் கூடியவையே என்று மீண்டும் கூறியிருக்கிறார் ஹர்திக் படேல்.