ஜெ.வின் ரத்த மாதிரிகள் இல்லை! சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் பதில்
மறைந்த ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள், அப்போலோ மருத்துவமனையில் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காலமான முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் தான் என்றும், அவரது உடலைத் தோண்டி எடுத்து தங்கள் முறைப்படி போலீஸ் பாதுகாப்புடன் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில், அம்ருதா, ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவரது மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்து, அரசியல் காரணங்களுக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அம்ருதாவுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய
தேவையில்லை என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.
அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து? மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அப்பலோ நிர்வாகம் பதிலளிக்கவில்லை. நேற்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் கேட்கப்பட்டது. இது
குறித்து இன்று பதிலளிக்க வேண்டும் என்று அப்பலோ நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் இல்லை அப்போலோ மருத்துவமனையில் இல்லை என்று அப்போலோ நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில்
பதிலளித்துள்ளது.
ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளில் இல்லை என்று அப்போலோ நிர்வாகம் கூறியதை அடுத்து, அம்ருதா தொடர்ந்த வழக்கில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.