தேனி எம்.பி. ரவீந்திரநாத் மனு தள்ளுபடி... ஓபிஎஸ் மகன் பதவிக்கு ஆபத்து..!
தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரிய தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரிய தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றவர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76,319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில்;- ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா இங்கு அதிகம் நடைபெற்றதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். பணம் பட்டுவாடா அதிகம் புழக்கத்தில் இருந்த தேனி தொகுதியில் வேலூர் தொகுதியை போல தேர்தலை ஏன் தள்ளி வைக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதனிடையே தேர்தல் குறித்து தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு எம்.பி. ரவீந்திரநாத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், எம்.பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. எனவே எம்.பி. ரவீந்திரநாத் எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும். தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.