ஓமிக்ரான் வைரஸ் குறித்து அமைச்சர் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். 

கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. திரையரங்குகளும் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போதும் இரண்டாம் அலையில் போதும் முழுவதுமாக மூடப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் பிறகு கொரோனா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து சமீபத்தில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதனடிப்படையில் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அரசு அனுமதியளித்தும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும்படியும் அறிவுறுத்தியது. இருப்பினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் திரையரங்கிற்கு செல்ல தயக்கம் காட்டி வந்தனர்.

இதனையடுத்து மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த அச்சம் குறைந்ததை அடுத்து பொங்கல் பண்டிகையிலிருந்து மக்கள் திரையரங்குகளுக்கு செல்ல தொடங்கினர். பின்னர் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சமீபத்தில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் மக்கள் பழைய உற்சாகத்துடன் திரங்குகளுக்கு படையெடுத்தனர். இந்நிலையில் உருமாறிய கொரோனாவின் ஓமிக்ரோன் வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இருப்பினும் திரையரங்குகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதித்து வரும் நிலையில், இதே நடைமுறை தொடருமா? அல்லது ஓமிக்ரோன் பரவலால் மீண்டும் திரையரங்குகள் மூடப்படுமா? என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிதானிடம் கேட்டபோது, ஓமிக்ரான் வைரஸ் குறித்து அமைச்சர் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.