அதிமுகவின் மோசமான ஆட்சிக்கு வெள்ளை அறிக்கையே சாட்சி... அதிமுகவை வறுத்தெடுத்த ஜவாஹிருல்லா.!
கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு நடத்தியதற்கு வெள்ளை அறிக்கையே சான்று என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தரங்கம்பாடியில் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு நடத்தியதற்கு வெள்ளை அறிக்கையே சான்று. அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளும் திமுகவை விமர்சிக்கக் காரணம், அவர்களுடைய நிர்வாக சீர்கேடு பல்வேறு தரவுகளுடன் அம்பலப்பட்டுவிட்டது என்ற உண்மையை மறைக்கவே குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை, மின் துறை உள்பட பல துறைகளில் எப்படியெல்லாம் முறைகேடுகள் நடைபெற்றன என்பதை சட்டப்பேரவையில் உள்ள தலைமை தணிக்கை ஆணையாளர் தெளிவான அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளார். கொரோனா காலகட்டத்தில்கூட அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மக்கள் பணத்தை எல்லாம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆதாரங்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறு எதுவும் இல்லை.
அந்த வகையில்தான் உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும்.” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.