மாணவர்களுக்கு குட் நியூஸ்..! தமிழகத்தில் மேலும் 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம்.! நிதி ஒதுக்கிய தமிழக அரசு
காலை உணவு திட்டம் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக 433 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு 4.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கான காலை உணவு திட்டம்
அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்கவும் காலை உணவு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயப்படுத்தப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக 433 பள்ளிகளுக்கு அனுமதி
உப்மா, கிச்சடி, பொங்கல், ரவா கேசரி அல்லது சேமியா கேசரி போன்ற பல்வேறு வகையான காலை உணவுகளை உள்ளடக்கும் வகையில், காலை உணவு திட்டத்தில் தினசரி மெனுவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் 150 கிராம் முதல் 200 கிராம் வரை காய்கறிகள் மற்றும் சாம்பார் சேர்த்து சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இந்த திட்டத்தில் 433 அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 4.6 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்