ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்து போராட்டம்.. பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை தொடரும் என எச்சரிக்கை.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அயனாவரம் சிக்னல் அருகே ஆ. ராசாவின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆ. ராசாவுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. வழக்கம் போல இந்தமுறையும் அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் நேரடி போட்டி என்ற சூழல் உள்ளதால், இரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில், திமுக வேட்பாளராக மருத்துவர் எழிலன் களம் காண்கிறார். இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார். அவரின் இப்பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராசாவை கண்டிக்கும் வகையில் அவருக்கு எதிராக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி அவரை மறைமுகமாக கண்டித்து டுவிட் செய்துள்ளார். இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆ. ராசா தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக பிரச்சாரத்தின் போது பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர் இனி எந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேச கூடாது என தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் அயனாவரம் சிக்னல் அருகே ஆ.ராசாவின் உருவபொம்மை எரித்து, கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஆ.ராசாவின் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர். முன்னதாக நடிகை குஷ்பு, மருத்துவர் ராமதாஸ், உள்ளிட்டோர் ராசாவை கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.