நாம் தமிழர் கட்சி கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள சென்னை மாநகரில் வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்ய வேண்டும். 

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழையும் பிற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 11ம் தேதி வட தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முன் தினம் முதல் விடிய விடிய கொட்டி தீர்க்கும் மழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், சாலைகளில் நிரம்பி வடிகால்களுக்கு மேலே வழிந்தோடி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு, இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை ராச்சத இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயார் செய்து தரப்படுவதுடன் அவர்களுக்கான நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,. 

கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாத பெருமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள சென்னை மாநகரில் வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கியுள்ள நீரினை விரைந்து அகற்றுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தற்காலிக உணவு மற்றும் பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் மற்றும் குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர் துடைப்புப் பொருட்கள் உடனடியாக கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். 

கடந்த காலங்களில் ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின்போதும் தன்னார்வலர்களாக முதலில் களத்தில் இறங்கி உதவி புரியும் நாம் தமிழர் தம்பிகள் தற்போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம், அன்பு தம்பி தங்கைகள் முதலில் தங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டு, மிக கவனமாக மக்கள் சேவையாற்ற வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன். என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.