அதிமுகவின் தோல்வி மக்கள் தந்த பரிசு மட்டுமல்ல, சிறந்த பதிலும் கூட. நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிமுகவின் துரோகங்களைப் பட்டியலிட்டு அறிக்கை விட்டிருந்தேன். ஆனால், மக்கள் நான் எதிர்பார்த்ததைவிட கூடுதலான தோல்வியை அதிமுகவுக்கு கொடுத்துள்ளார்கள்.  

ஜெயலலிதாவுக்கு செய்த பாவமும் சசிகலாவுக்கு செய்த துரோகமும் உங்களைத் துரத்திக்கொண்டே இருக்கும் என்று அதிமுக தோல்வி குறித்து நடிகர் கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்துள்ளது. 21 மாநகராட்சிகளில் ஒன்றைக்கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. கொங்கு அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட நிலையில், அங்கும் அதிமுக பலத்த சேதாரத்தைச் சந்தித்துள்ளது. அதிமுக தோல்வியால அக்கட்சித் தொண்டர்கள் துவண்டு போயிருக்கும் நிலையில், அதிமுக தோல்விக்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வென்றுள்ளது. அதிமுக சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக அதிமுகவின் கோட்டை என்று பிதற்றிக் கொண்டிருந்த எடப்பாடிக்கு கொங்கு மண்டலமே சங்கு ஊதிவிட்டது. அதிமுகவிற்கு தோல்வியைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்? துரோகம்தான் காரணம். பக்கத்திலேயே இருந்தோர்க்கு செய்த துரோகமும், தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகமும்தான் அதிமுக தோல்விக்குக் காரணம். அதிமுகவின் தோல்வி மக்கள் தந்த பரிசு மட்டுமல்ல, சிறந்த பதிலும் கூட. நான் கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிமுகவின் துரோகங்களைப் பட்டியலிட்டு அறிக்கை விட்டிருந்தேன். ஆனால், மக்கள் நான் எதிர்பார்த்ததைவிட கூடுதலான தோல்வியை அதிமுகவுக்கு கொடுத்துள்ளார்கள். 

இது தொடக்கம்தான். இன்னும் பல்வேறு விளைவுகளையும் தோல்விகளையும் அதிமுக எதிர்காலத்தில் சந்திக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் கூட்டணியே உடைத்து சுக்குநூறாக்கும். அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்த பாவமும், சசிகலாவுக்கு செய்த துரோகமும் இனி அவர்களைத் துரத்திக்கொண்டே இருக்கும்” என்று கருணாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.