மாணவர்களாகிய நீங்களே உங்களது பெற்றோர்களின் எதிர்காலமாக இருப்பதாகவும், சிறு பிரச்சனைக்காக திடீரென உயிரை மாய்த்து கொள்வதால் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்க்க வேண்டும் எனவும் வீடியோ பதிவில் கூறியுள்ளார். 

மாணவர்களின் தற்கொலை மனவேதனை அளிக்கிறது என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வெளியிட்டுள்ளார். தற்கொலை என்பது எதற்கும் முடிவாகாது என தெரிவித்துள்ள அவர், மாணவர்கள் ஒரு போர்வீரனின் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வரும் நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறிய பிரச்சனைகளுக்காக தற்கொலை முடிவுக்கு செல்லக்கூடாது என அனைத்து மாணவர்களுக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக டிஜிபி அலுவலக வலாகத்தில் நின்றவாறு அவர் பேசியுள்ள வீடியோவின் விவரம் பின்வருமாறு:- குறைவான மதிப்பெண், சிறு தோல்வி, வகுப்பு தலைவராக நியமிக்கவில்லை போன்ற சிறு காரணங்களுக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி போன்ற மோசமான முடிவுகளை எடுப்பதாக வருத்தம் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்களாகிய நீங்கள் நாட்டின் சொத்து எனவும், தற்கொலை செய்து கொள்வது சமூதாயத்திற்கு எதிரான குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய பிரச்சனைகளுக்காக மாணவர்களாகிய நீங்கள் தற்கொலை செய்து கொள்வதால், நாளடைவில் நாட்டின் முதல்வராகவோ, தலைமை செயலாளராகவோ, விஞ்ஞானியாகவோ, காவல்துறை டி.ஜி.பி-யாகவோ ஆக வாய்ப்பு இருப்பதை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களாகிய நீங்களே உங்களது பெற்றோர்களின் எதிர்காலமாக இருப்பதாகவும், சிறு பிரச்சனைக்காக திடீரென உயிரை மாய்த்து கொள்வதால் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்க்க வேண்டும் எனவும் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுகொள்ளலாம் எனவும் அல்லது 1098 என்ற தற்கொலை தடுப்பு உதவி மைய எண் மற்றும் 9152987821 என்ற உதவி எண்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும் எனவும் டி.ஜி.பி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மாணவர்கள் வரப்போகும் தேர்வுகளுக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு படிப்பே சுகமானதாக இருக்கும் எனவும் சைலேந்திர பாபு மாணவர்களுக்கு தனது வீடியோ பதிவின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.