ஊரடங்கு தொடர்பாக முடிவுவெடுக்க ஆட்சியாளர்களுக்கு முழு அதிகாரம்? தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்..!
தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதுடன் புதிய தளர்வுகள் என்னென்ன அறிவிக்கலாம் என்பது குறித்து சென்னை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதுடன் புதிய தளர்வுகள் என்னென்ன அறிவிக்கலாம் என்பது குறித்து சென்னை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3220ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று மாலை தலைமைச் செயலர் சண்முகம், சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திரரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், மதுரை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்புகளை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். சென்னையில் நடத்தப்பட்டதைப்போல் காய்ச்சல் முகாம்களை நடத்தி இணை நோய்கள் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி இறப்பை முற்றிலுமாக கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்டங்களில் அவசியம் இருப்பின் முழு ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து அரசுக்கு தகவல் தெரிவித்து அமல்படுத்தலாம் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போட வேண்டியது வருமா என்றும், வருகிற 31ம் தேதி தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதுடன் புதிய தளர்வுகள் என்னென்ன அறிவிக்கலாம் என்பது குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல்வர், மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.