காலில் போட்டு மிதிக்கப்பட்ட உரிமை..! அட்ரஸையே மறந்து கையெழுத்துப்போட்ட ஓ.பி.எஸ்- எடப்பாடி..!
எந்த முகவரியில் இயங்கி வருகிறது என்பது கூட தெரியாமல் அறிக்கை தயாரித்து இருப்பதும், அதில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து போட்டு இருப்பதும் எவ்வளவு கொடுமை என்கிற பேச்சும் எழுந்துள்ளது.
ஆகஸ்ட் 10ந்தேதி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சம்மந்தப்பட்ட இடங்களிலும், நெருங்கிய வட்டாரங்களிலும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
ஆழ்வார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நமது அம்மா நாளிதழில் அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தி உள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.இப்படி சட்டத்தை மீறி அரசின் ஒரு அங்கமான ஒரு துறையே செயல்பட்டதை எந்த ஊடகமும், பத்திரிகையாளர் சங்கமும் கண்டிக்கவில்லை. பணிக்கு வந்த ஊழியர்களை உள்ளே விட மறுத்தது காவல்துறை. அதனால், 11ம் தேதி வரவேண்டிய நாளிதழ் வெளியாகவில்லை.
இதனைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிகை என்பார்கள். அந்த பத்திரிகை சுதந்திரத்தைக் காப்போம் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பத்திரிகை சுதந்திரத்தை மட்டுமல்ல, பத்திரிகை நடத்துவோரின் உரிமையையும் காலில் போட்டு மிதித்திருக்கிறது.
காவல் துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஸ்டாலின் நேற்று சோதனை என்ற பெயரில் சென்னை, ஆழ்வார்பேட்டை அசோக் சாலையில் இயங்கி வரும் அதிமுக நாளேடான "நமது அம்மா" நாளிதழ் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில், காவல்துறையை ஏவி, சட்டத்தை மீறிப் பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே நுழைந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தையும், அடாவடியையும் அரங்கேற்றி உள்ளனர்.
சோதனைக்கு வந்த காவலர்கள் சட்டத்திற்கு விரோதமாக, பணிக்கு வந்த பத்திரிகை ஆசிரியர்களையும், அலுவலர்களையும் இரவு வரை நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திற்குள்ளேயே அனுமதிக்காமல் தடுத்துள்ளனர்.
பொதுவாக, ஏதேனும் ஓரிடத்தில் காவலர்கள் சோதனைக்குச் செல்லும்பொழுது, சம்பந்தப்பட்ட உரிமையாளர் முன்னிலையிலோ அல்லது அந்த இடத்தில் உள்ள பொறுப்பாளர்கள் முன்னிலையிலோதான் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், காவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாக, விவரம் அறிந்து வந்த நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மற்றும் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் பொறுப்பான அலுவலர்கள் யாரையும் அனுமதிக்காமல், சட்டத்திற்குப் புறம்பாக சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனை என்ற பெயரில் அனைத்துப் பூட்டுகளையும் போலிச் சாவி போட்டும், உடைத்தும் சோதனை நடத்தி உள்ளனர். இது, சட்டப்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
வேலியே பயிரை மேய்வது போல், காவல் துறையினர் எந்தவித முன் அனுமதியும் இன்றி சட்டத்தை மீறி, ஒரு பத்திரிகை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்துள்ளது மாபெரும் கிரிமினல் குற்றமாகும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.
பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சட்டத்திற்குப் புறம்பாக "நமது அம்மா" நாளிதழ் மீது நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு, காவல்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்த காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். வரும் காலங்களில் பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் இதுபோன்ற செயல்களில் இந்த அரசு ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்வதோடு, இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்"எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்டன அறிக்கையில் தமது பத்திரிகை அலுவலகம் ஆழ்வார்பேட்டை ’அசோக் சாலை’என்று குறிப்பிட்டு உள்ளனர். மாபெரும் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையின் அலுவலகம் செயல்படும் பகுதி ’ஆனந்தா சாலை’ என்கிற முகவரியில் இயங்கி வருகிறது என்பது கூட தெரியாமல் அறிக்கை தயாரித்து இருப்பதும், அதில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து போட்டு இருப்பதும் எவ்வளவு கொடுமை என்கிற பேச்சும் எழுந்துள்ளது.