டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல்! ஆளுநரை சந்திக்க அனுமதி வேண்டுமாம்!
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில் அவரை சந்திக்க சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, அவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.
ஆளுநரை இன்று சந்தித்த எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், மைனாரிட்டி அரசு நீடிக்கக் கூடாது என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்ததாக, துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டதாக தெரிகிறது. அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனது அலுவலக மாடியில் நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.