நடிகர் ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னணி குறித்து தெரியவந்துள்ளது.  

பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி மக்கள் மன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். தினந்தோறும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு மாவட்டவாரியாக மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து ரஜினியே நேரடியாக விசாரித்தும் வந்தார். அதுமட்டும் இன்றி பேட்ட படத்தின் டப்பிங் பணிகளையும் கூட ரஜினி நிறைவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் மராட்டிய மாநிலம் மந்த்ராலயம் சென்று ரஜினி தியானம் செய்துவிட்டு திரும்பினார். வருடத்திற்கு ஒரு முறை மந்த்ராலயம் செல்வது ரஜினியின் வழக்கம். இதன் அடிப்படையிலேயே கடந்த வாரம் அவர் அங்கு சென்று திரும்பினார். ஆனால் சென்னை திரும்பியதில் இருந்தே ரஜினிக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது.

மருத்துவர்களின் பரிசோதனையில் ரஜினிக்கு ஒவ்வாமை மற்றும் நோய் தொற்று ஏற்பட்டதாகவும், ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்த ரஜினிக்கு நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. பிரபல மருத்துவமனையில் மருத்துவர்கள் ரஜினி வீட்டுக்கு ரகசியமாக வந்து சிகிச்சை அளித்து செல்வதாகவும் சொல்லப்பட்டது.

சிகிச்சை முடிந்து ரஜினி இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் வரை ஆகும் என்றும் கூறப்பட்டது. இதனால் தான் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்த நிகழ்வில் ரஜினி பங்கேற்கவில்லை என்று தகவல் பரவியது. மேலும் இன்றுரஜினியின் மனைவி லதா ஏற்பாடு செய்துள்ள குழந்தைகளுக்கான நிகழ்வில் கூட ரஜினி கலந்து கொள்ளமாட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் ரஜினியின் மக்கள் தொடர்பு அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரஜினி நல்ல உடல் நிலையுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நலமுடன் உள்ளதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ரஜினி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது. மேலும் லதா ரஜினிகாந்த் நடத்தும் இன்றைய நிகழ்ச்சிக்கு ரஜினி எப்படியும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது