நடிகர் கமல்ஹாசன் நலமாக இருக்க காரணம் இதுதான் என்று விளக்கி இருக்கிறார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பினார். இதனையடுத்து அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல்ஹாசன்.இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் கமல்ஹாசன்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளார் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் கமல்ஹாசன் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,இளையராஜா என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய போது, ‘தென்ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் நாடுகளில், 88 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவாத வகையில், பல்வேறு நாடுகள் தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெப்ப பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், தலா ஒரு உதவி திட்ட மேலாளர் நியமிக்கப்படுகிறார். இவர், அனைத்து பயணியருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா என்று கண்காணிப்பார். தமிழகத்தின் முக்கிய இடங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தென்ஆப்ரிக்கா நாட்டில் இருந்து வேறு நாடு வழியாக தமிழகம் வருவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தும் பணியை மேற்கொள்வார். சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை, தென்ஆப்ரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், இஸ்ரேல், பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து வருவோர், கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர்.

எட்டு நாட்கள் தனிமைக்கு பின், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே, வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை. அதேவேளையில், பாதுகாப்புடன் இருப்பது அவசியம்’ என்றார். மேலும் பேசிய அவர், ‘கமல்ஹாசன் அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்த போதிலும் அவர் நலமாக இருக்கிறார்.அவரது உடல்நிலை சீராக இருக்கிறது.அவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார். தடுப்பூசி போடுவதன் விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்கப்படும்’ என்று கூறினார்.