திமுகவின் போராட்டங்கள் எல்லாம் அரசியல் நாடகம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தும் போராட்டம் என திமுகவினர் கூறுவது, அரசியல் நோக்கத்துக்கானது என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்காக திமுக போராட்டம் நடத்துவதாக நாடகம் நடத்துகிறது. திமுகவினர் நடத்தும் போராட்டம் பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ சாதகமானது இல்லை. அனைத்து அரசியல் நோக்கத்துக்காகவே நடத்தப்படுகிறது.
அதிமுக அரசின் மீது, மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவரது எண்ணம் பலிக்காது. ஆட்சியை கலைக்க வேண்டும் என துடிக்கும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.
தமிழகத்தின் வறட்சி பாதிப்புக்கு மத்திய அரசு கூடுதலாகவே நிதி வழங்கியுள்ளது. அதில் எந்த குறையும் இல்லை.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்த சுமுகமாகவே நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை நடந்து முடிந்து, இரு அணியும் ஒரே அணியாக மாறும் தருணம் விரைவில் வரும். சுமுகமான பேச்சு வார்த்தைக்கு உரிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.