செல்போன் உரையாடலை குரல் சோதனை நடத்த போலீசார் முடிவு - டிடிவி.தினகரனுக்கு தொடரும் நெருக்கடி
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி.தினகரன், இடை தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார். இதுதொடர்பாக டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்தனர்.
மேலும், இடை தரகர் சுகேஷ் சந்திரா உள்பட சிலரையும் கைது செய்து விசாரித்தனர். இதில், டிடிவி.தினகரனை 5 நாள் கஸ்டடியில் எடுத்த போலீசார் சென்னை, கேரளா, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இந்த விசாரணையின்போது, சென்னையில் இருந்து கேரளா வழியாக ஹவாலா பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து தாய்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவர் உள்பட 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
5 நாள் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, டிடிவி.தினகரனிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி போலீசார் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், ஏற்க மறுத்த கோர்ட், டிடிவி.தினகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், 15 நாள் நீதிமன்ற காவல் முடிந்து, இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சுகேஷ் சந்திராவுடன் டிடிவி.தினகரன், தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பான உரையாடல் பதிவு தங்களிடம் உள்ளது. இதற்காக அவரது குரல் பதிவை சோதனை செய்ய வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். பின்னர், டிடிவி.தினகரன் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.