The petition requested to ban dinakaran to compete in the election
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளராகடிடிவி தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், 1994-95-ம் ஆண்டுகளில் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம், 1972-ன் பிரிவுகள் 8, 9, மற்றும் 14 ஆகியவற்றை மீறும் வகையில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி அந்நிய செலாவணியை பெற்று இருக்கிறார்.
அந்நிய செலாவணி விதிமீறல்களுக்காக நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதும், கிரிமினல் வழக்கில் ஒருவர் தண்டிக்கப்படுவதும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்த மனு விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
