சென்னைவாசிகளே உஷார்... சிக்கலில் மாட்டி சின்னாபின்னமாகிடாதீங்க..!
அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் வாகனத்தை பயன்படுத்தாமல் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.
சென்னையில் முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தின்போது எவ்வித அனுமதியும் இன்றி வாகனங்களில் வருவோர் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்துத் துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், ’’முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 12 நாட்களும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனம், ஆட்டோ, டாக்ஸி ஆகியவை இயங்க அனுமதிக்கப்படும் என்றும் ஊர் சுற்ற அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் வாகனத்தை பயன்படுத்தாமல் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று பொருட்களை வாங்கலாம். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை கொண்டு வரும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
சரக்கு வாகன போக்குவரத்து, தண்ணீர், பால், பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். விமானம் மற்றும் ரயில் பயணிகள் தங்களிடம் பயணச் சீட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள போக்குவரத்து காவல்துறை போலி இ-பாஸுடன் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் இ பாஸ் பெற்றிருக்கவேண்டும். வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். சந்தேகங்களுக்கு 044 2345 23 30, 900 3130 103 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று’’அறிவிக்கப்பட்டுள்ளது