பழமையான கட்டடங்கள் ஆய்வுக்குப் பின் இடிக்கப்படும்: ஓ.எஸ். மணியன்
நாகை மாவட்டம் பொறையாளில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தை அடுத்து, பழமையான அரசு கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன், 50 ஆண்டுக்கு மேல் பழமையான அரசு கட்டடங்கள் ஆய்வு செய்த பின் இடிக்கப்படும என்று கூறியுள்ளார்.
நாகையில் நடைபெற்ற பருவமழை குறித்து ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 50 ஆண்டு பழமையான கட்டடங்கள் பழுது ஏற்பட்டிருந்தால் ஆய்வு செய்து இடிக்கப்படும் என்றார். அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். பழமையான கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றார்.
பருவமழை காலம் முடியும் வரை அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். பொது மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.