திமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.!
தஞ்சாவூர் அதிமுக முன்னாள் எம்.பி. கு.பரசுராமன் விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து திமுகவில் இணைய உள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பி.ஆர்.சுந்தரம், விஜிலா, பி.ஜி.நாராயணன், என்.ஆர்.கோவிந்தராஜ் என பலரும் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக, அமமுகவிலிருந்து பலரும் திமுகவில் சேர்ந்து வரும் நிலையில், மேலும் திமுகவில் பலர் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில் நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் எம்.பி. பரசுராமன் திமுக ஆட்சியைப் புகழ்ந்து பேசினார்.
“தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை கொடுத்தார்களோ, அவர் சிறப்பான ஆட்சியைத் தந்திக்கொண்டிருக்கிறார். தளபதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். நானும் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். எப்போதும் இந்த ஆட்சியே தொடர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.” என்றெல்லாம் பேசியிருந்தார். இதனால், பரசுராமன் திமுகவுக்கு தாவுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் அதிமுகவில் தஞ்சை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக உள்ள பரசுராமன் தனது ஆதரவாளர்களோடு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்து இன்று வந்தார். அங்கு திமுக நிர்வாகிகளையும் எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து பேசினார். விரைவில் பரசுராமன் திமுகவில் இணைய உள்ளதாக தஞ்சை திமுகவினர் தெரிவித்துள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளரான பரசுராமன் திமுகவில் இணைய இருப்பது தஞ்சை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.