The must cancel the case - M.K.Stalin
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்
என்றும் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா? அரசியல் காரணங்களுக்கா? என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் கடந்த வெள்ளி அன்று கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர். ஆடிட்டோரியத்தில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் ஒருங்கிணைந்தார்.
வட்டமேசை விவாத நிகழ்ச்சியில், டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழிசை சௌந்தரராஜன், கே.பாலகிருஷ்ணன், செம்மலை, தமாகா ஞானதேசிகன், தனியரசு,செ.கு.தமிழரசன் உள்ளிட்ட தலைவர்களும் இயக்குநர் அமீரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், இயக்குநர் அமீர் சில கருத்துக்களை முன்வைத்தார். அவரது கருத்துக்கு பாஜகவினர் மற்றும் ஆதரவு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியைத் தொடர முடியாதபடி மேடையை நோக்கி பாஜகவினர் முன்னேறினர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரும் மறறவர்களும் மிகுந்த சிரமப்பட்டு அவர்களைத் தடுத்து நிறுததினர். 45 நிமிஷங்களுக்குமேல் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் பாஜகவினர் தடுத்தனர்.
இந்த நிலையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை நிர்வாகத்தின் மீதும், கோவை பகுதி செய்தியாளர் சுரேஷ்குமார் மீதும் புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினரிடையே பிரச்சனையை ஏற்படுத்துதல், சொத்துக்களுக்கு சேதம் ஆகிய பிரிவுகளின்கீழ் கோவை பீளமேடு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமை தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று பல்வேறு கட்சி தலைவர்களும்,
ஊடகவியலாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கு பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியாது. புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தேவைதானா? என்றார். இதேபோல், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுததினர்.
