The Modi government can not hide the truth anymore told Chidambaram

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசு, நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறிக்கொள்கிறது, இனிப்பு வார்த்தைகளைக் கூறியும், பொய்யாக மார்தட்டிக் கொண்டும், உண்மை விவரங்களை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புள்ளிவிவரம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ம் ஆண்டில் 6.5 சதவீதம் இருக்கும் என மத்திய புள்ளியியல் மையம் நேற்று முன் தினம் அறிவித்தது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்டுவிட்டரில் நேற்று கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது-

பொருளாதார வளர்ச்சிக் குறைவு

நாம் மிகவும் அச்சப்பட்ட, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைவு உண்மையாகி இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி அரசு கூறிக்கொண்டு வந்தது, அனைத்தும் காற்றில் ஆவியாகி இருக்கிறது.

மறைக்க முடியாது

இன்னும் இனிப்பு வார்த்தைகளைக் கூறி, பொய்யாக மார்தட்டிக் கொண்டு, உண்மையான பொருளாதார விவரங்களை மறைக்க முடியாது. பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு சமீபத்தில் சமூகத்தில் நிலவிய அதிருப்தி நிலையும் நேரடியான காரணமாக அமைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கவலைக்கிடம்

இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “ நாட்டின் பொருளாதார நிலை என்பது மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அனைத்து துறைகளும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன. தேசிய அளவிலான முதலீடு விகிதமும் வீழ்ச்சி அடைந்துவிட்டது’’ எனத் தெரிவித்துள்ளார்.