உங்களுக்கு ஹாஸ்டலே இல்ல... அலுவலகம் எதுக்கு - இழுத்து பூட்டிய எடப்பாடி கவர்ன்மெண்ட்...!
தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததையடுத்து எம்.எல்.ஏக்கள் அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
பதிலளிக்க மறுத்ததால் டிடிவி தினரனுக்கு ஆதரவு அளித்து வந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் இதுகுறித்து அரசு இதழிலும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார் தனபால். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததையடுத்து எம்.எல்.ஏக்கள் விடுதியையும் காலி செய்ய வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார்.
18 எம்எல்ஏக்களும் சட்டமன்ற விடுதியை காலி செய்ததும் அறைகளுக்கு சீல் வைக்க விடுதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அரூர் எம்.எல்.ஏ முருகன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பன் ஆகியொர் டிடிவிக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் பதவி பிடுங்கப்பட்டதால் அந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.