’அதிமுகவை விட்டு எங்கேயும் போகமாட்டாங்க’ - தினகரன் கூடாரத்தை காலி செய்யும் இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பு...!
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனையின் பேரிலேயே முதலமைச்சர் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது எனவும் தினகரன் ஆதரவாளர்கள் மேலும் பலர் அதிமுகவில் இணைவார்கள் எனவும் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற டிடிவி தினகரனுக்கும் எடப்பாடிக்கும் ஏகாப்பொருத்தம்தான்.
இதனால் டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சுடன் கைகோர்த்தார் எடப்பாடி. இதனால் எடப்பாடி டீமை விட்டு சில எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் வெளியேறினர்.
ஆனால் எடப்பாடி அணியே வெற்றி பெற்று இரட்டை இலையை கைப்பற்றியுள்ளது. இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார். எடப்பாடி தரப்பில் இன்னும் யார் என்று முடிவாகவில்லை.
இந்நிலையில், பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.பிக்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா, கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை. இதனால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனையின் பேரிலேயே முதலமைச்சர் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது எனவும் தினகரன் ஆதரவாளர்கள் மேலும் பலர் அதிமுகவில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார்.