டிடிவி ஆதரவாளர் வெற்றிவேலின் வெற்றி செல்லும்...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேல் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிவேலும் திமுக சார்பில் என்.ஆர்.தனபாலனும் வேட்பாளராக களமிறங்கினர்.
அப்போது 519 வாக்குகள் வித்தியாசத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தனபாலனை விட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வெற்றிவேல் வெற்றி பெற்றார்.
இதையடுத்து வெற்றிவேல் வெற்றி பெற்றது செல்லாது என கோரி என்.ஆர்.தனபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனவும் பண பலம் மற்றும் அதிகார பலத்தைப் வைத்து வெற்றிவேல் வெற்றி பெற்றதாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், வெற்றிவேல் வெற்றி பெற்றது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் குற்றசாட்டுகளுக்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறி வெற்றிவேலுக்கு எதிரான மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.