புதுச்சேரியில் 2021-இல் பாஜக ஆட்சி மலர்வது உறுதி என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் அமைச்சர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகிய நமச்சிவாயம், டெல்லியில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ வளமான புதுச்சேரிதான் எங்களுடைய எண்ணம். அதன் காரணமாகவே பாஜகவில் சேர்ந்துள்ளோம். புதுச்சேரிக்கான வளர்ச்சியை பிரதமர் மோடி உருவாக்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்திருக்கிறார். மோடி தலைமையில் இந்தியா ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


இந்தியாவை போல் புதுச்சேரியும் ஒளிர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். முதல்வர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுவிட்டது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவே இந்த முடிவை எடுத்தேன். புதுச்சேரியில் பாஜக ஆட்சியை நிச்சயமாக கொண்டுவர பாடுபடுவோம். பொது மக்கள் தயாராகிவிட்டனர். புதுச்சேரியில் 2021-இல் பாஜக ஆட்சி மலர்வது உறுதி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை நிறுவ இரவு பகல் பாராது உழைப்போம்” என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.