இது தொடர்ந்தால், பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் “ஒன்றியம்” என்ற வார்த்தை இடம் பெற்று விடும் ஆபத்து உள்ளது. கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வேண்டுமென்றே ’ஒன்றியம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள். இம்முறை அது நடக்கக் கூடாது.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மொழி பெயர்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் நீட் விலக்குக் கோரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று முன் தினம் சந்தித்து பேசினார். அவரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்தது குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ளார். அதில், “சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய மக்கள் அனைவரும் நமது மத்திய அரசை ‘இந்திய அரசு-மைய அரசு’ என்றே அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்திய அரசை தமிழில் “இந்திய - மத்திய அரசு” அல்லது “இந்திய மைய அரசு- இந்திய அரசு-நடுவன் அரசு” என்றுதான் அழைத்தார்கள். பல்வேறு அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கடந்த கால ஆட்சியிலிருந்த மு.கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசங்கத்தை ‘இந்திய அரசு - மைய அரசு - மத்திய அரசு’ என்றுதான் அழைத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள் இந்திய அரசை வேண்டுமென்றே இழிவு படுத்த வேண்டுமென்ற நோக்கில் ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ’ஒன்றியம்’ என்ற வார்த்தையானது ஊராட்சி அளவிலான பஞ்சாயத்தை மட்டுமே அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. ‘Union of States’ என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதை வேண்டுமென்றே திரித்து, இந்திய மத்திய அரசை Block அளவிலான பஞ்சாயத்து அமைப்புடன் இணைத்து, மத்திய அரசை இழிவுபடுத்தும் வகையில், “ஒன்றிய அரசு” என்ற வார்த்தையை திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பன்வாரிலால் புரோஹித் ஜூன் மாதத்தில் ஆங்கிலத்தில் உரை ஆற்றினார். அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் “ஒன்றிய அரசு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ’இந்தியா’ என்ற பெயரைக் குறிப்பிட வேண்டிய இடங்களில்கூட பயன்படுத்தவில்லை, அது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து 17 ஜூன் 2021 அன்று அப்போதைய ஆளுநருக்கு மனுவும் எழுதியுள்ளேன். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்னும் அவர்கள் இந்திய அரசை தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் ’ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையையே பயன்படுத்துகின்றனர். 
இது தொடர்ந்தால், பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் “ஒன்றியம்” என்ற வார்த்தை இடம் பெற்று விடும் ஆபத்து உள்ளது. கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வேண்டுமென்றே ’ஒன்றியம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள். இம்முறை அது நடக்கக் கூடாது. மத்திய அரசு மற்றும் பஞ்சாயத்து யூனியன் இரண்டையும் சமப்படுத்த முடியாது. இரண்டும் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டுள்ளன. இந்திய இறையாண்மையின் மீதான அவர்களின் வெறுப்பை, தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்காகவே ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை ஸ்டாலினும், அவரது சகாக்களும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில், ஆளுநராகிய தாங்கள் இதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இங்கு தமிழகத்தில் சில அரசியல் கட்சியினர் மட்டுமே தவறான பிரச்சாரத்தாலும், சரியான புரிதல் இல்லாமையாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துகின்றனர். ஆனால், பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் நீட் தேர்வை வரவேற்கின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆளுநராகிய ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் பேரரசாக இருக்க வேண்டும் இனிமேல் எந்த நிலையிலும் திமுக அரசால் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று மொழிபெயர்க்க அனுமதிக்கக் கூடாது. எனவே, இவை குறித்து தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கிருஷ்ண்சாமி வலியுறுத்தியுள்ளார்.
