இந்தத் தேர்தலில் யார் வரக் கூடாது என்பதே முக்கியம்... மு.க. ஸ்டாலினை டார்கெட் செய்யும் நடிகை குஷ்பு.!
இந்த தேர்தலில் யார் வர போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல. யார் வரக் கூடாது என்பதே முக்கியம் என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினை எதிர்கட்சி தலைவர் என்று மரியாதையாக அழைக்கிறார். ஆனால், ஸ்டாலின் முதல்வரை எடுபிடி பழனிச்சாமி என்று பேசி வருகிறார். புதிய கல்வி கொள்கையை ஸ்டாலின் எதிர்த்தார். ஆனால், அவர்கள் குடும்பத்தினர் தமிழையா படிக்கிறார்கள்? புதிய கல்வி கொள்கையில் மொழி திணிப்பு என்பதே கிடையாது. முடிந்தால் கூடுதல் மொழி கற்று கொள்ளுங்கள்.
நீங்களும் மக்களுக்கு நல்லது செய்ய மாட்டீர்கள். பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவரும் திட்டங்களையும் எதிர்க்கிறீர்கள். மக்கள் கண்மூடித்தனமாக திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் ஆறுதல் பரிசு போல புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்கள். பாஜகவை பொறுத்தவரை பதவி ஆசை எதுவும் எங்களுக்கு கிடையாது. இந்த தேர்தலில் யார் வர போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல. யார் வரக் கூடாது என்பதே முக்கியம்” எனக் கூறினார்.