திமுக தலைவர்களின் வாரிசுகள் ஆணவம் பிடித்தவர்கள்.. மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.. கே.பி.முனுசாமி ஆவேசம்.!
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் எந்த உள் கட்டமைப்பு பணிகளையும் செய்யவில்லை.
திமுகவினரின் ஆணவப் பேச்சுக்கு மக்கள் வாக்குகள் மூலம் தீர்ப்பு அளிப்பார்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி; கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், நாகரசம்பட்டி, பர்கூர், ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘திமுக ஆட்சியை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் உள்ளனர். அதனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றியைப் பெறும். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் எந்த உள் கட்டமைப்பு பணிகளையும் செய்யவில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது. இப்படி எல்லா வகையிலும் முதல்வர் ஸ்டாலின் அரசு தோல்வி அடைந்துள்ளது. அரசு இயந்திரங்களை தன் கட்சியைப் போல திமுகவினர் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிமுக அமைதியான முறையில் நேர்மையாக புகார் அளிக்கிறது. அப்படிச் செய்தால், குண்டர்களை வைத்து அதிமுகவினரை தாக்குகிறார்கள். காவல் துறையினர் நாங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. எங்கள் மீது தாக்குதல் நடத்திய அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களின் வாரிசுகளும் ஆணவத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆணவப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் நல்ல தீர்ப்பை அளிப்பார்கள்” என்று கே.பி. முனுசாமி தெரிவித்தார்.