தொப்பி வெற்றி பெற்று வெளியே வரும்; கூக்குரலிடும் புகழேந்தி!
டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்கு சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து சென்னை, ஆர்.கே. நகர் தொகுதி ஓராண்டாக காலியாக உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியை ஏற்பார் என கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனைப் பார்ப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா இன்று மீண்டும் சிறைக்கு சென்றார். பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில், சசிகலாவை அவரின் ஆதரவாளர்கள் வழி அனுப்பி வைத்தனர்.
பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
உயிருக்கு உத்தரவாதமில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் புகழேந்தி குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி போனால்தான் தமிழகத்துக்கு நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை, ஆர்.கே. நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்டு முதலமைச்சர் பொறுப்பை ஏற்பார் என்றும் புகழேந்தி கூறினார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் தொப்பி வெற்றி பெறும் என்றும் புகழேந்தி நம்பிக்கை தெரிவித்தார்.