நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதி.. அமைச்சர் ஜெயக்குமார் தகவல்..!
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை 5 அமைச்சர்கள் இன்று சந்தித்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், சி.வி. சண்முகம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என ஆளுநரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தந்ததால் தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த முடியும். ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது. முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.