பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் தமிழக ஆளுநர்..!
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து முதல்வர் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க பணிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான திமுக சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததால், திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை வரும் 20-ம் தேதி விசாரிக்கப்படுகிறது. அதுவரை பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வருகிறார். மிகவும் சிக்கலான சூழல் உள்ளதால் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து பிறகு ஆளுநர் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.