தூய்மை பணியாளர்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது: சிஐடியு கிண்டல்.
மக்களின் உயிர்காக்க கொரானா நேரத்தில் தன் உயிரை பணயம் வைத்து முன்களத்தில் நின்று பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்
கொரானா நேரத்தில் உயிரை பணயம் வைத்து முன்களத்தில் நின்று பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது என சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் முன்களப்பணியாளர்கள் (துப்புரவு தொழிலாளர்கள்) 300 பேர் பணிநீக்கம் செய்துள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதபோராட்டம் நடைபெறுவதாக இருந்தது. போலீசாருடன் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 624/- தினக் கூலி வழங்க வேண்டுமென 11/10/2017 எண் 62(2D) அரசாணை வெளியிட்டது.
ஆனால் அதை அரசு வழங்கவில்லை. எனவே அதனை கண்டித்து சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சிஐடியு பலகட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக சங்க நிர்வாகிகள் 291 பேர் வேலையை விட்டு நிறுத்தப் பட்டுள்ளனர். 714 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களிலும் செங்கொடி சங்கத்தில் இல்லையென எழுதி கொடு என தொழிலாளர்கள் மிரட்டப்படு கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் அப்பட்டமாக சட்டவிரோத நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கான்ட்ராக்டர்களுக்கு ஆதரவாக பல ஆண்டுகாலம் வேலைசெய்த தொழிலாளர்களை வெளியேற்ற துடிக்கின்றனர்.
மக்களின் உயிர்காக்க கொரானா நேரத்தில் தன் உயிரை பணயம் வைத்து முன்களத்தில் நின்று பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கொண்டாட வேண்டும் என்று சொல்லிய அரசு இன்று இவர்களை திண்டாடவிட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளி விரோத போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை திரும்ப பெற்று அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நாளை அல்லது மறுநாள் அரசோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என காவல்துறை கூறி இருக்கிறார்கள். அப்போதும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தினை நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.