கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையின்போது, அத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர்த் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காகப் போராடியவர்கள், குடியரசு முன்னாள் தலைவர், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோரைப் போற்றும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவுருவச் சிலைகள் நிறுவப்படும்” என்று தெரிவித்தார். அதன்படி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்குக் கடலூரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. விடுதலைப் போரில் அஞ்சலையம்மாள் அனுபவித்த துயரங்களுக்கும், செய்த தியாகங்களுக்கும் இது சிறந்த அங்கீகாரம். இது வரவேற்கத்தக்கது. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றுவதற்காக எந்த மண்ணில் அஞ்சலையம்மாள் போராடினாரோ, அதே மண்ணில் அவருக்கு சிலை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அஞ்சலை அம்மாளுக்கு நினைவு மண்டபமும் அமைக்கப்பட வேண்டும் என்பதே பாமகவின் கோரிக்கை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


வயிற்றில் கருவை சுமந்த நிலையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற வீரப்பெண்மணி. காந்தியால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டப்பட்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் பெருமைகளையும், வரலாற்றையும் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்! தமிழகத்தின் பிற பகுதிகளில் அப்துல் கலாம், ரவீந்திரநாத் தாகூர், மருது சகோதரர்கள், ப. சுப்பராயன், மு.வரதராசனார், முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் உள்ளிட்டோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.