The fishermen refused to accept the relief aid announced by the chief minister that Rs 10 lakh would be paid to the fishermans family.

 உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவியை மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். முதலமைச்சர் நேரில் வரும் வரை போராட்டத்தை விட போவதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இதனால் தென் தமிழகமும், கேரள மாநிலத்தின் ஒரு சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஓகி புயல் வருவதற்கு நீண்ட நாள்களுக்கு முன்பே ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வெளியேற முடியாமல் தத்தளித்தனர். 

சிலர் குஜராத், லட்சதீவு உள்ளிட்ட பகுதிகளில் கரை ஒதுங்கினர்.இந்நிலையில், கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் இங்கு வந்தால் மட்டுமே இடத்தை விட்டு நகருவோம் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.5000 நிவாரணம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லாம் மீனவ குடும்பத்திற்கும் ரூ.2500 நிவாரணம் வழங்கப்படும் என்றும் உணவு படியாக மீனவர்களுக்கு ரூ. 2000 ஆக உயர்த்தியும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவியை மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர். முதலமைச்சர் நேரில் வரும் வரை போராட்டத்தை விட போவதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.