இந்த ஆண்டு நீட் தேர்வை எதிர்கொள்ளும் சூழல்.. உண்மையில் வருந்தத்தக்கது... மு.க. ஸ்டாலின் அறிக்கை..!
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இரட்டை வேடம் போடும் பாஜகவின் பொறுப்பாளர் நீதிமன்றத்தில் இக்குழுவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார். அடிமை சேகவம் செய்யும் எடப்பாடி பழனிச்சாமி இந்தக் குழுவையே நாடகம் என்று சொன்னார். அதிமுகவின் அடிமைச் சேகவம், பாஜகவின் இரட்டை வேடம் சேர்த்து நெத்தியடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பாஜகவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். தமிழ் நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு இது தொடக்கப்புள்ளி. சட்ட நடவடிக்கைகள் அடுத்தடுத்து காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே. இறுதியில், நீட் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.