முடிவுக்கு வரும் அரசியல் முழுக்கு... கொரோனாவுக்குப் பிறகு டேக் ஆப் ஆவாரா சசிகலா..?
கொரோனா தாக்கம் முடிந்த உடன் தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருகிறேன் என்று சசிகலா பேசிய புதிய ஆடியோ வெளியாகியுள்ளது.
அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார் சசிகலா. பொது எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை சசிகலா வலியுறுத்திய நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. தினகரனின் அமமுகவும் படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சசிகலா கட்சித் தொண்டரிடம் பேசிய ஆடியோ வெளியானது. அதில் கொரோனா முடிந்தவுடன் அரசியலுக்கு வருகிறேன் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரக்கோணம் செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசிய இன்னொரு ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், “தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள். எனக்கு புரிகிறது. இந்த கொரோனா தாக்கம் முடிந்த உடன் தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள்” என்று ஆறுதல் சொல்லும் வகையில் சசிகலா பேசியிருக்கிறார். இந்த ஆடியோக்கள் எதையும் சசிகலா மறுக்கவில்லை. எனவே, அரசியலுக்கு முழுக்கு போட்ட முடிவிலிருந்து சசிகலா மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தாக்கம் முடிந்த பிறகு சசிகலாவின் அரசியல் வருகையை எதிர்பார்க்கலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் குஷியாகச் சொல்கிறார்கள்.