அப்பல்லோவையும் அஹ்ரஹார சிறையையும் ஆராய்கிறது உயர்நீதிமன்றம் - ஜெ. கைரேகையில் அடுத்த அதிரடி...
ஜெயலலிதா சிறை சென்றபோது வைத்த கைரேகை தொடர்பான ஆவணங்களுடன் டிச.8ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக சார்ப்பில் டாக்டர் பி.சரவணன் வேட்பாளராக களமிறங்கினார்.
ஏ. கே. போஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஜெயலலிதா உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது கை ரேகை பதிவு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.
இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.
இதை எதிர்த்து ஜெயலலிதாவின் கைரேகை பதிவில் உள்ள சந்தேகம் குறித்தும் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சிறை சென்றபோது வைத்த கைரேகை தொடர்பான ஆவணங்களுடன் டிச.8ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் அப்பல்லோவில் ஜெ.சிகிச்சை பெற்றபோது வைத்த கைரேகையை சோதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜெயலலிதாவின் ஆதார் அட்டை கைரேகையையும் சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.