அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பாஜக தேசியத் தலைமை குழு அமைத்ததன் மூலம் பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பாஜக தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

தமிழக அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் தமிழக மக்களின் கலாசாரத்தை திமுக அரசு மாற்ற முயல்கிறது என விஜயசாந்தி தெரிவித்துள்ளார். மேலும், லாவண்யா மரணத்தில் காவல்துறை செய்த தவறால் மாநில அரசுக்கு அவப்பெயர் என்றும் லாவண்யா மரணம் குறித்து பிற கட்சிகள் பேசாதது வருத்தமளிக்கிறது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தினரின் மதமாற்ற முயற்சிதான் காரணம் என பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில் , இது தொடர்பாக விசாரிக்க அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். குழு உறுப்பினர்களான விஜய சாந்தி , சித்ரா ராய் வாகு , சந்தியா ராய் , கீதா விவேகானந்தா நால்வரும் நேற்றைய தினம் மாணவி லாவண்யாவின் குடும்பத்தார் உட்பட பலரிடம் விசாரணை நடத்தியிருந்தனர். விசாரணை குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் சென்னை தியாகராயநகர் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

வானதி சீனிவாசன் பேட்டி:

மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது முதல் ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகிறோம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எங்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி. மாணவி மரணம் தொடர்பாக நால்வர் குழு தனது விசாரணை அறிக்கையை ஜெ.பி. நட்டாவிடம் வழங்குவர். மாணவியின் அருகில் உள்ள வீட்டாரிடமும் , லாவண்யா உறவினர்களிடமும் மரணம் குறித்து கேட்டறிந்துள்ளோம். திருமணம் செய்ய வேண்டாம் பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பாஜக தேசியத் தலைமை குழு அமைத்ததன் மூலம் பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பாஜக தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

லாவண்யா மரணம் தொடர்பாக காவல்துறை செய்த தவறால் மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ க்கு சென்றுள்ள நிலையில் , மாநில அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது. அதிமுக உட்பட பிற கட்சிகள் இந்த விசயம் குறித்து பேசாதது எங்களுக்கு வருத்தம் தருகிறது. சட்டப் பேரவையில் பேச எனக்கு முறையாக நேரம் தரப்படுவதில்லை , நேரம் கொடுத்தால் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் குறித்து பேரவையில் பேசுவேன். 

விஜயசாந்தி பேட்டி

லாவண்யா , மதமாற்றம் குறித்து வீடியோவில் தெளிவாக கூறியுள்ளார். இல்லாத விசயத்தை நாங்கள் பேச மாட்டோம். மாணவியின் மரணம் தொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரிக்கிறோம்.மதமாற்ற குற்றச்சாட்டை லாவண்யாவின் குடும்பத்தினரே முன்வைத்துள்ளனர் , நாங்கள் புதிதாக பேசவில்லை. லாவண்யா தந்தை 25 ஆண்டுகால திமுக உறுப்பினர். மாவட்ட ஆட்சியரிடம் நேற்று பேசினோம். வழக்கு சிபிஐயிடம் இருப்பதால் அவர் அதிகமாக எதுவும் கூறவில்லை. 

இறந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு 1கோடி இழப்பீடு வழங்க வேண்டும். வரும் காலத்தில் யாரும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளிடம் மதமாற்றத்திற்காக வற்புறுத்தக் கூடாது என்பதுதான் குழுவின் நோக்கம். லாவண்யா வீடியோவில் கூறியதால்தான் உண்மை வெளியில் தெரிந்தது , இதுபோல பல இடங்களிலும் நடக்கலாம். இதில் அரசியல் செய்வது எங்களது நோக்கம் இல்லை.லாவண்யாவை அவரது அம்மா கொடுமைப்படுத்தியாக கூறுவது தவறான தகவல் , வழக்கை திசை திருப்பும் முயற்சி இது. தமிழக அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக இருக்கிறது.

இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்களே இருக்கின்றனர். லாவண்யா மரணம் தொடர்பாக முதல்வர் அனைத்து தரப்பிலும் விசாரிக்க வேண்டும். படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகிறார்கள். இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. திமுக அரசு , தமிழக கலாசாரத்தை மாற்ற முயல்கிறது. முதலமைச்சர் ஏன் இந்த விசயத்தில் மௌனமாக இருக்கிறார் " என்று கூறினார்.