இயக்குநர் அமீர் மீதான வழக்கை ரத்து செய்யுங்கள்...! டிஜிபி அலுவலகத்தில் இயக்குநர்கள் முறையீடு!
தனியார் தொலைக்காட்சி நடத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பலர் சென்னை டிஜிபியிடம் மனு ஒன்றை அளித்தனர்.
இயக்குநர் அமீர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் சினிமா இயக்குநர்கள் தரப்பில் மனு கொடுத்துள்ளனர். புதிய தலைமுறை தொலைக்காட்சி கோவையில் நடத்திய வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இயக்குநர் அமீர், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கார்த்திகை செல்வன், கோவை செய்தியாளர் சுரேஷ்குமார், எம்.எல்.ஏ. தனியரசு மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய தலைமுறை நிர்வாகம், செய்தியாளர் சுரேஷ்குமார், எம்எல்ஏ தனியரசு, இயக்குநர் அமீர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், பத்திரிகையாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று கூறினர். இது குறித்து பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும் என்றும், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் கோரிக்கை விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையில், இயக்குநர் அமீர் உட்பட பலர் சென்னை டிஜிபி அலுவலகம் சென்றனர். அப்போது இயக்குநர் அமீர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டிஜிபியிடம அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதன் பின்னர் இயக்குநர்ர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பாரதிராஜா, கோவையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசினார். நாகரீகமாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் அமீரை சிலர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க வந்தனர். அதனை தொலைக்காட்சியிலும் சரியாக ஒளிபரப்பு செய்யவில்லை. தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் நடந்த விவாதத்தில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். இயக்குநர் அமீர் மீது கொலை முயற்சி நடந்துள்ளது. தற்போதைய தமிழக நிலவரத்தை மேடையில் விவாதம் செய்ததற்கான பரிசு இது.
இயக்குநர் அமீர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று டிஜிபியைப் பார்த்து மனு கொடுத்துள்ளோம். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லியுள்ளார். பெரிய நம்பிக்கையுடன் செல்கிறோம். காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனை தாக்கி கீழே தள்ளியுள்ளனர். ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் ஒடுக்கப்படுகிறது என்றார்.
அப்போது பேசிய இயக்குநர் அமீர், நிகழ்ச்சி அரங்கில் இருந்து போலீசார் என்னை பத்திரமாக மீட்டனர். கோவை போலீசில் அளிக்க வேண்டிய புகாரை, சென்னை டிஜிபியிடம் கொடுத்துள்ளோம் என்றார்.