பெரும்பான்மை இல்லை என்பதை அவர்களே நிரூபித்துள்ளனர் - டிடிவி தரப்பு தாக்கு...
எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை அவர்களே நிரூபித்துள்ளதாகவும், எனவே ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடந்த மாதம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் விளக்கம் அளித்தனர். போதிய விளக்கம் இல்லாததால் கால அவகாசம் அளித்தார் தனபால்.
இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் பூபதியை சந்தித்து 4 எம்எல்ஏக்களும் இன்று விளக்கம் அளித்தனர்.
தமிழக பேரவைச் செயலர் பூபதியை சந்தித்த தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், சுப்ரமணியம், பழனியப்பன் ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேலும், தங்க தமிழ்செல்வனும் செய்தியாளர்களை சந்தித்தனர். எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை அவர்களே நிரூபித்துள்ளதாகவும், எனவே ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
மேலும், தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களை அழைத்து காட்டிய பிறகும் ஜெயக்குமார் தவறான கருத்தை கூறிவருகிறார் என தெரிவித்தனர்.