அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

உட்கட்சி தேர்தல் - அதிமுக ஆலோசனை

அதிமுக தலைமையகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. அதிமுக உட்கட்சித் தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தலையிட வேண்டும் என பேசப்பட்டுள்ளது, இதனை அதிமுக நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் இதை வலியுறுத்தி உள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் தலையீடு உட்கட்சி தேர்தலில் பல இடங்களில் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி பேசப்பட்டுள்ளது. மேலும் தற்போது 25 மாவட்டங்களுக்கு தான் உட்கட்சி தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் அடுத்தக்கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் மோதல்

இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாகவும் நீக்குவது குறித்தும் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம், வேலுமணி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த இடத்தில் ஒரு பரபரப்பு சூழல் உருவானது இதனையடுத்து அந்த கூட்டத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மனவேதனையுடன் வெளியேறினார். இதனை தொடர்ந்து வைத்திலிங்கத்திடம் சிவி.சண்முகம் மற்றும் வேலுமணி வருத்தம் தெரிவித்ததையடுத்தும், மற்ற தலைவர்கள் சமரசம் செய்ததையடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து வைத்திலிங்கம் மீண்டும் அதிமுக அலுவலகம் வந்தார். இறுதியாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே உட்கட்சி தேர்தலில் அதிகாரம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா- அதிமுக தொடர்பு இல்லை

அதன்பின்னரே ஓ.பி.எஸ்., மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோர் இசைவு தெரிவித்த பின்னர் உட்கட்சி தேர்தல் தொடர்பான மூன்று., நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகியது. மாவட்ட செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர் தேர்தல் நான்காம் கட்டம் நடைபெறுவதால் அதில் முக்கிய பங்கு கட்சியின் தலைமைக்கும் தேவைப்படுவதால் 4 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிக்கையில், கூட்டத்தில் எந்தவித கூச்சலும், குழப்பமும் ஏற்படவில்லையென தெரிவித்தார். ஆரோக்கியமான முறையில் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறினார். தொடர்பில்லாத ஒருவரை பற்றி பேசி நேரம் வீண்டிக்க விரும்பவில்லையென்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.