நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி.
திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு குறித்து தெரிவித்திருந்தோம். மாணவர்கள், பெற்றோர்களுக்கு குழப்பத்தை உருவாக்க விரும்பவில்லை. நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்.
நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழை எளிய மாணவர்கள் கல்வி உதவித்தொகையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்பதுதான் எங்களின் எண்ணம். நீட் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவல்ல, நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பிலும் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மனு அளித்துள்ளோம்.
திமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு குறித்து தெரிவித்திருந்தோம். மாணவர்கள், பெற்றோர்களுக்கு குழப்பத்தை உருவாக்க விரும்பவில்லை. நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்.
தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாரோ தேவையில்லாத செய்திகளை பரப்புகின்றனர். பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்த தொகுதிக்கு மருந்துகளை அளித்து வருவதாக கூறினார். மேலும் தடுப்பூசியை பெற்றுத்தர முடியாதவர்கள் தான் இதுபோன்று பேசி வருவதாக கூறினார்.