போராட்டத்தில் குதித்த திமுக - மீனவர்கள் பிரச்சனையில் குரல் கொடுக்கும் ஸ்டாலின்
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டமே தண்ணீரில் தத்தளித்தது. மேலும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் மாயமாயினர்.
புயலால் பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்களும் வெளியாகியது. இதனால் அவரகளை மீட்க தமிழக அரசு கப்பல் படையையும் கடலோர காவல் படையையும் களமிறக்கியுள்ளது.
ஆனால் ஆழ்கடல் பகுதியில் காணாமல் போன மீனவர்களை கரை பகுதியிலேயே தேடுகின்றனர் என கூறி மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து தங்களை சந்திக்க வேண்டும் என கூறி ஏராளமான மீனவர்கள் 15 க்கும் மேலான நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரில் சென்று ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
மேலும் திமுக உறுப்பினர்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அதில் பேசிய ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வு செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.