சென்னையில் எங்கேனும் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் தொலைபேசியில் அழைத்தால் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என விக்கிரமராஜா கூறினார். 

தமிழக முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வணிகர் சங்கம் துணை நிற்கும் என வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ஓட்டேரியில் வாகனங்களில் மளிகை பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் திட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா, தமிழக முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வணிகர் சங்கம் துணை நிற்கும். சோதனை காலத்தில் மக்களுக்கு துணை நிற்கிறோம், தொலைபேசி ஆர்டர் மூலமும், வாகனங்கள் மூலம் லாப நோக்கம் இல்லாமல் மளிகை பொருட்களை குறைந்த விலையில் விற்று வருகிறோம் என்றும், வருகின்ற 6 நாட்களிலும் வணிகர்கள் பொருட்களை வீடு தேடி சென்று விற்பனை செய்து சேவை செய்ய வேண்டும் என வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், சென்னையில் எங்கேனும் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் தொலைபேசியில் அழைத்தால் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என விக்கிரமராஜா கூறினார். 

அதே நேரத்தில், நடமாடும் வாகனங்கள் மூலமாக விற்கப்படும் மளிகை பொருட்கள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் 2197 வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கக் கூடிய சூழலில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இல்லங்களுக்கு சென்று வழங்குவதற்காக கடந்த வாரத்தை பொருத்தவரையில் காய்கறி மற்றும் பழங்களை பொதுமக்களின் இல்லங்களுக்கு தள்ளுவண்டி, நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட 2635 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மளிகைப் பொருட்களையும் நடமாடும் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்கம் இணைந்து 2197 வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை இன்று முதல் வரும் 7 தேதி வரை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் பெரிதளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை அலைந்து திரிந்து வாங்காமல் தங்களது இல்லங்களுக்கு வந்து விற்பனை செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.