தமிழகத்திற்கு 4.2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்... சுகாதாரத்துறை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...!
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தமிழகத்துக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடவடிக்கை கை கொடுக்க ஆரம்பித்தது. எனவே தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு மட்டுமல்லாது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே சரியான தடுப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. எனவே தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 83 லட்ச தடுப்பூசிகளும் , நேரடி கொள்முதல் மூலம் 13 லட்சம் என மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும், 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், அதனைக் கொண்டு இரு தினங்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ‘தடுப்பூசி இல்லாததால், ஜூன் 3 முதல் 5 வரை தடுப்பூசி போட முடியாது என்றும் ஜூன் 6ம் தேதி முதல் கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தமிழகத்துக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள இந்த கொரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் இன்று மாலை 5.20 மணி அளவில் சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தடுப்பூசிகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் வேகமெடுக்கும் என்பது தெரியவந்துள்ளது.