The bus passes for school and college students

பள்ளி மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் தொடரும் எனவும் அவர்களின் கட்டண செலவை அரசே ஏற்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழக அரசு பேருந்துகளில் 100% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி இரவு அறிவித்து 20ம் தேதி காலை முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. 

தினக்கூலிகள், மாத ஊதியதாரர்கள் ஆகியோர் பேருந்து கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பள்ளி மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் தொடரும் எனவும் அவர்களின் கட்டண செலவை அரசே ஏற்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 3.21 லட்சம் பேருக்கு 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 498 பேருந்துகள் சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மக்களின் கஷ்டங்களை கருத்தில் கொண்டு சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 

அரசு 2018 - 2019 ஆம் நிதியாண்டில் போக்குவரத்து துறைக்கு ரூ. 540.99 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாலிடெக்னிக் மற்றும் ஐஐடி மாணவர்களுக்கு கட்டண சலுகை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.